Published : 20 Apr 2014 01:24 PM
Last Updated : 20 Apr 2014 01:24 PM
தமிழகத்தில் மீண்டும் அதிக அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி நிலவரப்படி, இதுவரை இல்லாத அளவுக்கு 28 கோடியே 50 லட்சம் யூனிட் மின்சாரம் ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மீண்டும் அதிக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு போன்ற பல பிரச்சினைகளால் மின் உற்பத்தி குறைந்தது.
மேலும், கோடை காலம் துவங்கியதால் மின்சார தேவை யும் அதிகரித்தது. இதனால் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 5 மணி நேர மின் வெட்டு அமலானது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் மின் தட்டுப்பாடு குறையத் தொடங்கியுள்ளது. அனைத்து மின் நிலையங்களிலும் கோளாறுகள் சரி செய்யப்பட்டு, உற்பத்தி துவங்கியுள்ளதால், மீண்டும் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கடந்த 17-ம் தேதி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 28 கோடியே 56 லட்சத்து 36 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மின்சார வாரியம் ஒரு நாளில், இதுவரை விநியோகம் செய்த மின்சார அளவில், இதுவே அதிகபட்சமாகும்.
ஏற்கனவே, கடந்த 9-ம் தேதி 28 கோடியே 45 லட்சத்து 18 ஆயிரம் யூனிட் மின்சாரம் விநியோகம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சனிக்கிழமை நிலவரப்படி 28 கோடியே 31 லட்சத்து 78 ஆயிரம் யூனிட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.
மின் வெட்டின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டு, பெரும்பாலான மாவட்டங்களில் ஒன்று முதல் 2 மணி நேரம் வரை மட்டுமே சில இடங்களில் மின் வெட்டு அமலானது. இன்னும் ஒரு வாரத்தில் மின் வெட்டு அறவே நீங்க வாய்ப்புள்ளது என்று மின் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT