Published : 11 Oct 2014 10:31 AM
Last Updated : 11 Oct 2014 10:31 AM

அருண்செல்வராசனிடம் மீண்டும் போலீஸ் காவலில் விசாரணை ஏன்?

அருண்செல்வராசனிடம் போலீஸ் காவலில் 3 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சென்னை சாலிகிராமத்தில் தங்கியிருந்த அருண்செல்வராசன் என்ற இலங்கை தமிழரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த செப்டம்பரில் கைது செய்தனர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர்களுடன் தொடர்பில் இருந்த அருண்செல்வ ராசன், இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

இதற்கான பல ஆதாரங்களை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அருண்செல்வராசனை கடந்த மாதம் 6 நாட்கள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மீண்டும் அருண் செல்வராசனை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்திய நீதிபதி மோனி, இன்று (அக். 11) காலை 11 மணி முதல் 13-ம் தேதி மாலை 4 மணி வரை 3 நாட்கள் அருண்செல்வராசனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

அருண்செல்வராசன் பயன்படுத்திய லேப்டாப்பை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதில் பதிவாகி அழிக்கப்பட்ட தகவல்களையும் அதிகாரிகள் மீண்டும் சேகரித்துள்ளனர். அதில் குறிப்பிட்ட சில கோப்புகளை அதிகாரிகளால் திறந்து படிக்க முடியாத அளவுக்கு ரகசிய குறியீட்டு எண்கள் மூலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் இருக்கும் தகவல்களை முழுமையாக பெறுவதற்கு அருண்செல்வராசனின் உதவி கட்டாயம் தேவை என்பதால் அவரை மீண்டும் காவலில் எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x