Published : 08 Oct 2014 10:37 AM
Last Updated : 08 Oct 2014 10:37 AM

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் பயங்கரம்: 3 சிஐஎஸ்எப் வீரர்கள் சுட்டுக்கொலை

கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் தலைமைக்காவலர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இரு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு அருகிலேயே உள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரம் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வளாகத்தில்தான் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) அலுவலகமும் உள்ளது. வீரர்கள் பணிக்கு செல்லும் முன்பு இந்த அலுவலகம் வந்து துப்பாக்கி பெற்று கொண்டு, பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்வது வழக்கம்.

சரமாரியாக சுட்டார்

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிஐஎஸ்எப் அலுவலக முதல் மாடியில் உள்ள அறையில் தலைமைக் காவலர் மோகன்சிங் (57) கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காலை நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக நேற்று அதிகாலை 5:15 மணிக்கு பாதுகாப்புப் படை வீரர் விஜய்பிரதாப்சிங் (40) வந்தார். ஆயுதக்கிடங்கில் 9 எம்எம் ரக துப்பாக்கியை பெற்றுக்கொண்டு மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோகன்சிங் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற வீரர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆங்காங்கே பதுங்கினர். மோகன்சிங்கை கொன்றுவிட்டு மாடியில் இருந்து கீழே வந்த விஜய்பிரதாப்சிங், அங்கு பதுங்கியிருந்த பாதுகாப்பு படையின் கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன் (54), சக வீரர்கள் கோவர்தணன் பிரசாத் (42), பிரதாப்சிங் (57) மற்றும் தலைமை காவலர் சுப்புராஜ் (58) ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் 20 ரவுண்டுகள் சரமாரியாக சுட்டுள்ளார்.

வயிற்றில் பாய்ந்த குண்டு

இதில் கணேசன், சுப்புராஜ் ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர். பிரதாப்சிங்குக்கு அடி வயிற்றில் மூன்று குண்டுகள் பாய்ந்தது. மற்றொரு வீரர் கோவர்தணன் பிரசாத் தப்பி ஓடியபோது இடது கால் முட்டியில் அடிபட்டு கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தால் கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகம் பரபரப்புக்குள்ளானது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மற்ற வீரர்கள் விஜய்பிரதாப்சிங்கை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கல்பாக்கம் போலீஸார் விரைந்து சென்று, 3 உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் அடைந்த மற்ற இருவரையும் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய விஜய்பிரதாப்சிங்கை கைது செய்து கல்பாக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். சக வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சிஐஎஸ்எப் வீரர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தால் கல்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்

இதனிடையே காலில் முறிவு ஏற்பட்ட கோவர்தணன் பிரசாத் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிரதாப்சிங்கின் வயிற்றில் பாய்ந்திருந்த 3 குண்டுகளும் அகற்றப்பட்டு அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x