Published : 14 Oct 2014 12:38 PM
Last Updated : 14 Oct 2014 12:38 PM

திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம்

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தற்காலிக பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

ஜங்ஷன் பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாலும், தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் நூற்றுக்கும் மேல் இயக்கப்படுவதாலும் திருச்சி ரயில்வே ஜங்ஷன், மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பொதுமக்களின் நலன் கருதி, திருச்சி மாநகரில் நாளை முதல் மன்னார்புரம் ரவுண்டானா அருகேயுள்ள ராணுவ மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் செய்துள்ளனர். இந்த தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை வழித்தடத்தில் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக வட்டப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மற்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த தற்காலிக பேருந்து நிலையத்தை பயன்படுத்தி மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் ஏற்படக் கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒத்துழைப்பு வழங்கிடுமாறு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பயணிகள் பாதுகாப்புக்காக மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் தற்காலிக காவல் உதவி மையம் ஒன்று நிறுவப்பட உள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x