Published : 26 Jun 2017 11:19 AM
Last Updated : 26 Jun 2017 11:19 AM
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர, சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது அவ்வப்போது இலங்கை கடற்படையால் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் மற்றும் மீனவர்களின் மீன்பிடிச்சாதனங்கள் சேதப்படுத்தப்படுவதும், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இதனால் மீனவர்களின் மீன்பிடித் தொழில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, அவர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். இதனையெல்லாம் மத்திய பாஜக அரசு முக்கியப்பிரச்சனையாக கருதாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தமிழக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு அவ்வப்போது மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடிதம் எழுதிவருகிறது. இது போதுமானதல்ல. மேலும் தமிழக அரசு தீர்க்கமான முடிவு எடுத்து அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையே அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அது வரையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதை மத்திய பாஜக அரசு இலங்கை அரசுக்கு உறுதியோடு தெரிவிக்க வேண்டும்.
மேலும் மத்திய அரசு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தோடு தொடர்பு கொண்டு அங்குள்ள தமிழக மீனவர்களுக்கு அனைத்து உதவிகளை செய்வதற்கும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும், மேலும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடவும் வலியுறுத்த வேண்டும்.
தற்போது இலங்கை சிறையில் உள்ள 69 தமிழக மீனவர்களையும், இலங்கையின்வசம் உள்ள அனைத்து விசைப்படகுகளையும் மீட்பதற்கு மத்திய பாஜக அரசு உடனடியாக முக்கிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர, சுமூகத் தீர்வு ஏற்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று தமாகா வலியுறுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT