Published : 15 Oct 2014 10:08 AM
Last Updated : 15 Oct 2014 10:08 AM

இரவு நேர சோதனையில் போதை ஓட்டுநர்களை பிடிப்பதில் போலீஸ் மெத்தனம்: அப்பாவிகளிடம் கெடுபிடி காட்டுவதாக மக்கள் புகார்

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்காமல், குடும்பத்துடன் வருபவர்களிடமும், அப்பாவிகளிடமும் போலீஸார் கெடுபிடியாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிப்பதற்காக சென்னையில் தினமும் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபடுகின்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இந்த சோதனை நடைபெறும். சென்னை நகருக்குள் குறிப்பிட்ட 54 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தினமும் அங்கு மட்டும் சோதனை நடத்தப்படுகிறது.

இதனால் வழக்கமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு போலீஸார் சோதனை செய்யும் இடங்கள் நன்றாகவே தெரியும். இதனால் அந்த வழியை தவிர்த்து தெருக்களுக்குள் புகுந்து அவர்கள் தப்பித்து சென்றுவிடுகின்றனர். குடும்பத்துடன் கார்களில் வரும் ஆண்களையும், மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வரும் ஆண்களையும் வழிமறித்து 'பிரீத் அனலைஸர்' கருவியில் ஊத வைத்து சோதனை செய்வதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

குடும்பத்துடன் வரும் ஆண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், குடும்பத்தார் முன்னிலை யிலேயே மரியாதையில்லாமல் போலீஸார் பேசுவதாக கூறப்படு கிறது.

கடந்த 5 மாதங்களில் சென்னை நகரில் இரவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் சுமார் 1,100 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர். உண்மையிலேயே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை சரியாக அடையாளம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, "சென்னையில் தினமும் இரவில் 54 இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.

கடந்த 5 மாதங்களில் மட்டும் சென்னை நகரில் நடத்தப்பட்ட சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 22,914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 6,221 பேர் காரில் வந்தவர்கள். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை போதையை அளவிடும் கருவியான ‘பிரீத் அனலைசர்' மூலம் கண்டுபிடித்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அதிக போதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 374 பேரின் ஓட்டுநர் உரிமம் நீதிமன்றம் மூலம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், போதையில் வாகனம் ஓட்டியதாக 2,396 வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் உயிரிழப்பு விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 சதவீதம் குறைந்துள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x