Published : 19 Jun 2017 09:10 AM
Last Updated : 19 Jun 2017 09:10 AM

பொறியியல் படிப்புக்கு 1.40 லட்சம் பேர் விண்ணப்பம்: கணினி மூலம் நாளை ரேண்டம் எண் ஒதுக்கீடு- அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள்

பொறியியல் படிப்புக்கு விண்ணப் பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவ, மாணவிகளுக்கு கணினி மூலம் நாளை (செவ்வாய்க்கிழமை) ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தில் 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உட்பட மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நாளை கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கப்படுகிறது.

ரேண்டம் எண் என்பது கணினி மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் 16 இலக்க எண் ஆகும். பொறியியல் படிப்புக்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிப்பதால் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

கலந்தாய்வு

அத்தகைய சூழலில், கலந்தாய்வின்போது யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வினா எழலாம். அப்போது, முதலில் கணித மதிப்பெண் பார்க்கப்படும். அதில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவர் முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். ஒருவேளை கணித மதிப்பெண் சமமாக இருந்தால் இயற்பியல் மதிப்பெண்ணும் அதுவும் சமமாக இருப்பின் மாணவர்களின் முக்கிய பாடமும் (உயிரியல், கணினி அறிவியல்) அதுவும் சமமாக இருந்தால் பிறந்த தேதியும் பார்ப்பார்கள்.

எதிர்பாராவிதமாக பிறந்த தேதியும் ஒன்றுபோல் அமைந்தால், கடைசி வாய்ப்பாக ரேண்டம் எண் பார்க்கப்படும். அப்போது, யாருடைய ரேண்டம் எண்ணின் மதிப்பு குறைவாக இருக்கிறதோ அவர் கலந்தாய்வுக்கு முதலில் அழைக்கப்படுவார்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 மாணவர்களுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கணினி மூலம் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்ட அடுத்த சில விநாடிகளில் மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண்ணை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டு தங்களுக்குரிய ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x