Published : 28 Dec 2013 11:27 AM
Last Updated : 28 Dec 2013 11:27 AM
கூடங்குளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 68 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கூட்டுக் குடிநீர் திட்டம், ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்கும் திட்டம், தனி மின்விசை திட்டம் போன்ற எண்ணற்ற குடிநீர்த் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு தாமிரபரணி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட்டத்தினை கூடங்குளம் அணுமின் நிலைய சுற்று வட்டார பகுதிகளுக்கான வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 68 கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் வருடாந்திர பராமரிப்பு செலவிற்காக 87 லட்சம் ரூபாய் ஆகியவற்றிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கூடங்குளம் மற்றும் 12 கிராம ஊராட்சிகளில் உள்ள 100 ஊரகக் குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு
55 லிட்டர் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT