Published : 20 Jun 2019 04:26 PM
Last Updated : 20 Jun 2019 04:26 PM

குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளுக்கு சரியான விடைகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை எனப் புகார் எழுந்தது.

இதையடுத்து, குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்ற விண்ணப்பதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணையில் உள்ளது.

முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட 150 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்புக்கொண்டிருந்தது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) இறுதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்ந்த விக்னேஷின் மதிப்பெண் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

31 பதவிக்கான இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல்  1,550 பேர் பிரதான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவித்த டிஎன்பிஎஸ்சி தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டும் மனுதாரர் இதில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்வு எழுதிய ஒருவர் தொடர்ந்த வழக்கில் தற்போது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இதனை பொது வழக்காக கருதி ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகள் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x