Published : 06 Jun 2019 01:21 PM
Last Updated : 06 Jun 2019 01:21 PM

முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளது: சிபிசிஐடி போலீஸார் உயர் நீதிமன்றத்தில் தகவல்

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி காவல் துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமாகி இன்றுடன் 112 நாட்கள் ஆகிறது. அவரை கண்டுபிடித்து தர கோரி மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கின் விசாரணையின்போது முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட இரு தினங்களுக்குள் முகிலன் மாயமாகி இருப்கதாகவும், அவரை விரைவில் கண்டுபிடித்து தரவும் கோரினர்.

இதனிடையே முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி காவல் துறையின் சீல் இடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுகொண்ட நீதிபதிகள், முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், காவல்துறையினருக்கு இதுகுறித்த துப்பு கிடைத்துள்ளதாகவும், அதை வெளியில் கூறினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x