Last Updated : 20 Dec, 2018 04:43 PM

 

Published : 20 Dec 2018 04:43 PM
Last Updated : 20 Dec 2018 04:43 PM

சர்கார் பட விவகாரம்: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு முன்ஜாமீன்; உயர் நீதிமன்றம் உத்தரவு

சர்கார் பட விவகாரம் தொடர்பான வழக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைத்துள்ளதாக பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி இளந்திரையன், இம்மனுவை விசாரித்து, ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்தார். கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கமாட்டேன் என்றும் உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  

ஆனால், மன்னிப்பு கோரவும், உத்தரவாதம் அளிக்கவும் முருகதாஸ் மறுத்து விட்டார்.இந்நிலையில் நீதிபதி இளந்திரையன் முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு தேவைப்படும்போது மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏ.ஆர்.முருகதாசுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x