Last Updated : 18 Nov, 2025 10:22 AM

1  

Published : 18 Nov 2025 10:22 AM
Last Updated : 18 Nov 2025 10:22 AM

பிஹார் தோல்வி பிடிக்குள் சிக்கிய காங். - என்ன செய்யப் போகிறது திமுக?

பிஹார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தங்களின் பேரவலிமையைக் கூட்டிக் கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் கட்சி, இப்போது திமுக தரும் இடங்களை மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

பிஹார் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களைக் கேட்டு ஆர்ஜேடி-யுடன் ஆரம்பத்திலிருந்தே மல்லுக்கு நின்றது காங்கிரஸ். கடைசியில், 61 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டாலும், 7 தொகுதிகளில் ஆர்ஜேடி-யுடனேயே நட்புடன்(!) மோதியது காங்கிரஸ். கடைசியில், காங்கிரஸுக்கு கைவசமானது என்னவோ 6 தொகுதிகள் தான். பிஹாரில் மட்டுமல்ல... தமிழகத்திலும் 1996 முதல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட்ட போதெல்லாம் அபாரமான தோல்விகளையே சத்தித்திருக்கிறது.

1996 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 64 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. இதேபோல், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-வுக்கு அழுத்தம் கொடுத்து 63 இடங்களை பெற்ற காங்கிரஸ், ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. ஓர் இடத்தில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.

இதேபோல், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு 41 இடங்களை தந்தது திமுக. அதில் எட்டில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. ஆனால், கடந்த 2021 தேர்தலில் சுதாரித்துக் கொண்டது திமுக. அப்போது காங்கிரஸ் வஞ்சகமின்றி 60 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், “அதிக தொகுதிகளை கேட்டு வாங்கி தோற்றுப் போய் எதிர்க் கூட்டணியை ஜெயிக்க வைக்கிறீர்கள்” என்று சொல்லி காங்கிரஸுக்கு 25 இடங்களை மட்டுமே தந்தது திமுக. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. ஆக, குறைவான தொகுதிகளைக் கொடுத்தால் நிறைவாக ஜெயிக்கிறது காங்கிரஸ் என்பது கடந்த கால வரலாறாக இருக்கிறது.

இந்நிலையில், இம்முறை வெற்றி வாய்ப்புள்ள 125 தொகுதிகளில் கவனம் செலுத்தும்படி காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான கிரீஷ் சோடங்கரே தமிழக காங்கிரஸாரை உசுப்பேற்றிக் கொண்டிருந்தார். இதில், கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் போன்றவர்கள் “அமைச்சரவையிலும் பங்கு கேட்போம்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கதர் தலைவர்களின் இத்தகைய விருப்பப் பேச்சுகளை எல்லாம் மறுத்துப் பேசாமல் திமுக-வினர் மவுனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், பிஹாரின் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதால் தமிழக காங்கிரஸார் எதுவும் பேசமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.

நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி மேலும் உறுதியாகி விட்டதால் இப்போதைக்கு மத்திய அரசில் எந்தக் குழப்பமும் வர வாய்ப்பில்லை. அதனால், மத்தியில் திமுக-வின் தயவு காங்கிரஸுக்கு கட்டாயம் தேவை. அதனால், தமிழகத்தில் திமுக என்ன சொல்கிறதோ அதைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு அந்தக் கட்சி ஆளாகி இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

மறுபடியும் 25 தொகுதிகள் தான் தரமுடியும் என திமுக சொன்னால் காங்கிரஸ் கட்சி தட்டாமல் அதை ஏற்றுக் கொண்டு போட்டியிடுமா அல்லது தொண்டர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளை ஆராயுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x