Published : 18 Nov 2025 06:38 AM
Last Updated : 18 Nov 2025 06:38 AM

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்

கோப்புப் படம்

சென்னை: அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி ஜாக்​டோ-ஜியோ சார்​பில் இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது. அதேநேரம், வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட்​டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும் என தலை​மைச் செய​லா​ளர் எச்​சரித்​துள்​ளார்.

அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை ரத்​து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது, அரசு துறை​களில் உள்ள லட்​சக்​கணக்​கான காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவது உள்பட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு ஊழியர்​-ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பான ஜாக்​டோ-ஜியோ போராடி வரு​கிறது.

இந்​நிலை​யில், கடந்த அக். 9-ம் தேதி சென்​னை​யில் நடை​பெற்ற ஜாக்​டோ-ஜியோ மாநில ஒருங்​கிணைப்​பாளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி அக்​.16-ம் தேதி மாவட்​டத் தலைநகரங்​களில் கோரிக்கை ஆர்ப்​பாட்​ட​மும், நவ.18-ம் தேதி ஒரு​நாள் அடை​யாள வேலை நிறுத்​தப் போராட்​ட​மும் நடத்​து​வதென்​றும முடிவு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, கடந்த அக்​.16-ம் தேதி அனைத்து மாவட்​டங்​களின் தலைநகரங்​களி​லும் அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக இன்று (நவ.18) ஒரு​நாள் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது.

சென்​னை​யில் எழில​கக் கட்​டிட வளாகத்​தில் காலை 10.30 மணி​யள​வில் நடை​பெறும் போராட்​டத்​தில் ஏராள​மான அரசு ஊழியர்​களும் ஆசிரியர்​களும் கலந்​து​கொள்​வ​தாக ஜாக்​டோ-ஜியோ மாவட்ட நிர்​வாகி​கள் தெரி​வித்​தனர். ஜாக்​டோ-ஜியோ நடத்​தும் அடை​யாள வேலைநிறுத்​தப் போராட்​டத்​துக்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்​கள் இயக்​கம் ஆதரவு அளிக்​கும் என்று அதன் மாநில பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் தெரி​வித்​தார்.

தலை​மைச் செய​லர் எச்​சரிக்கை இதற்கிடையே, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் அனைத்து துறை​களின் செயலர்​களுக்கு நேற்று அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: குறிப்​பிட்ட சில கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நவ. 18-ம் தேதி (செவ்​வாய்) நடை​பெறம் ஒரு​நாள் வேலை நிறுத்​தப் போராட்​டத்​தில் குறிப்​பிட்ட சில அரசு ஊழியர் சங்​கத்​தினர் பங்​கேற்க திட்​ட​மிட்​டிருப்​ப​தாக அரசுக்கு தகவல் வந்​துள்​ளது.

அரசு அலு​வல​கங்​களின் அன்​றாட செயல்​பாடு​கள் பாதிக்​கப்​படும் வகை​யில் அரசு ஊழியர்​கள் ஆர்ப்​பாட்​டத்​திலோ அல்​லது போராட்​டத்​திலோ ஈடு​படு​வது தமிழ்​நாடு அரசு ஊழியர் நடத்தை விதி​முறையை மீறும் செயல் ஆகும். எனவே, நவ.18-ம் தேதி நடை​பெறும் போராட்​டத்​தில் கலந்​து​ கொள்​ளும் அரசு ஊழியர்​கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்​கப்​படும். அவர்​களுக்கு ஒரு​நாள் சம்​பளம் வழங்​கப்​ப​டாது.

நவ.18 அன்று எந்த அரசு ஊழியருக்​கும் மருத்​துவ விடுப்பு தவிர தற்​செயல் விடுப்பு எது​வும் வழங்​கப்​படக்​கூ​டாது. அனைத்து துறை​களின் செயலர்​களும் தங்​கள் அதி​காரத்​துக்கு உட்​பட்ட அரசு அலு​வல​கங்​களில் செவ்​வாய்​க்கிழமை காலை 10.15 மணிக்​குள் ஊழியர் வரு​கைப்​ப​திவு விவரங்​களை தெரிவிக்க வேண்​டும்.

அதன் நகலை மனிதவள மேலாண்​மைத்​துறைக்கு மின்​னஞ்​சல் வாயி​லாக அனுப்ப வேண்​டும். அதே​போல் அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும் தங்​கள் நிர்​வாக வரம்​புக்கு உட்​பட்ட அரசு அலு​வல​கங்​களில் ஊழியர் வரு​கைப்​ப​திவு விவரத்தை வரு​வாய் நிர்​வாக ஆணை​யர் அலு​வல​கம் வாயி​லாக அரசுக்கு தெரிவிக்க வேண்​டும். அதன் நகலை மனித வள மேலாண்​மைத்​துறைக்கு தவறாமல் அனுப்ப வேண்​டும். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x