Published : 18 Nov 2025 06:10 AM
Last Updated : 18 Nov 2025 06:10 AM
சென்னை: வங்கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று மேற்கு அல்லது வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
மேலும், வரும் 22-ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.18) பெரும்பாலான இடங்களிலும், நாளை முதல், வரும் 23-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி,தேனி மாவட்டங்களிலும் 19, 20-ம் தேதிகளில் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், 21-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 12 செ.மீ.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 9 செ.மீ. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT