Published : 17 Nov 2025 06:19 AM
Last Updated : 17 Nov 2025 06:19 AM
சென்னை: மாநகராட்சி சார்பில் சென்னையில் 7 இடங்களில் நேற்று நடைபெற்ற ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாமில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக தங்கள் விவரங்களை பதிவு செய்து, ரேபிஸ் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, மைக்ரோ சிப் பொருத்திக்கொள்ள வேண்டும். செல்லப் பிராணி உரிமையாளர்கள் வலைதளத்தில் சென்று பதிவுச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவது, மைக்ரோசிப் பொருத்துவது போன்ற சேவைகள், மாநகராட்சியின் திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செயல்படும் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன.
செல்லப் பிராணியின் உரிமையாளர்கள் எளிதில் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட 6 மையங்களிலும், தென்சென்னையில் சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும் காலை 8 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 2,552 செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தப்பட்டது. செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. புளியந்தோப்பில் நடைபெற்ற முகாமை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டார். சென்னையில் இதுவரை, மொத்தம் 10,820 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சிறப்பு முகாம், மேற்கண்ட 7 இடங்களிலும் வரும் நவ.23-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT