Last Updated : 16 Nov, 2025 11:00 AM

1  

Published : 16 Nov 2025 11:00 AM
Last Updated : 16 Nov 2025 11:00 AM

பேராயர்களையும் அருட்தந்தையரையும் தேர்தல் முகவர்களாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு

பாதிரியார்கள், அருட்தந்தையர்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ ஊழியம் செய்பவர்களை திமுக-வும் சிறுபான்மையினர் ஆணையமும் சேர்ந்து கொண்டு திமுக தேர்தல் முகவர்களாக மாற்றி இருப்பதாக பாஜக கல்வியாளர்கள் பிரிவு மாநிலச் செயலாளர் கல்வாரி என்.தியாகராஜன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களை திமுக வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வருகிறது. நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கான எந்த நல திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

சிறுபான்மையினர் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு கொடுத்த நிதிகளையும் முறையாக பயன்படுத்தவில்லை. தமிழக சிறுபான்மையினர் நலவாரியம் ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் இல்லாமல் முதல்வர் ஸ்டாலினை புகழ் பாடும் வாரியமாக உள்ளது.

திமுக-வும் தமிழக சிறுபான்மையினர் நல வாரியமும் சேர்ந்து கொண்டு பேராயர்களை, அருட்தந்தையர்களை, குருமார்களை கன்னியாஸ்திரிகளை, பாஸ்டர்களை, கிறிஸ்தவ ஊழியங்கள் செய்பவர்களை திமுக-வின் தேர்தல் முகவர்களாக மாற்றியுள்ளது.

இந்நிலையில், கிறிஸ்தவ சிறுபான்மை மக்கள் மத்தியில் பிரச்சார தொடக்கமாக கிறிஸ்துமஸ் விழாவை பல மண்டலங்களாக பிரித்து கொண்டாட திமுக-வினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன் மூலம் கிறிஸ்தவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

இருப்பினும் 2026 தேர்தலில் கிறிஸ்தவ சிறுபான்மையின மக்கள் திமுக-வை நம்பி ஏமாறமாட்டார்கள். குறிப்பாக, கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கண்டிப்பாக திமுக-வுக்கு இந்த முறை வாக்களிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x