Published : 15 Nov 2025 07:05 AM
Last Updated : 15 Nov 2025 07:05 AM
திருப்போரூர்: திருப்போரூர் அருகே இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினார். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் விமானபடை பயிற்சி தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புறப்பட்ட பயிற்சி விமானம் திருப்போரூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து விட்டு, விமானத்தை கீழ்நோக்கி இறக்க முயற்சி செய்தநிலையில், விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால் விமானி பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். பயிற்சி விமானம் புறவழிச் சாலை அருகே உள்ள உப்பளம் பகுதியில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

அந்த இடத்தில் இடத்தில் குடியிருப்போ, கட்டிடமோ இல்லாததால் பெரிய விபத்து ஏற்படவில்லை. தகவல் அறிந்த தாம்பரம் விமானப்படைஅதிகாரிகள், மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.விமானியை, ஹெலிகாப்டரில் மருத்துவமனை கொண்டு சென்றனர். திருப்போரூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் புதுக்கோட்டை அருகே இன்ஜின் கோளாறு காரணமாக தனியார் பயிற்சி விமானம் ஒன்று நேற்று முன்தினம் சாலையில் தரையிறங்
கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT