Published : 13 Nov 2025 05:48 PM
Last Updated : 13 Nov 2025 05:48 PM

கரூர் நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜர்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கரூர் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக அதிகாரிகள் ஆஜராகினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக். 30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

அக். 31-ம் தேதி தொடங்கி வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அக். 31-ம் தேதி மற்றும் நவ 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் வேலுசாமிபுரத்தில் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர்.

நவ. 2-ம் தேதி காமராஜபுரத்தில் ராம்குமார் என்பவரை தேடி சென்ற சிபிஐ குழு அவர் இல்லாததால் 3 பேர் கொண்ட குழு ரயில் மூலம் சென்னை சென்றனர். அங்கு சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்ற சிபிஐ விஜய் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்களை கேட்டு சம்மன் வழங்கினர்.

இதையடுத்து நவ. 8 மற்றும் 9-ம் தேதி ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் பிரிவு திருச்சி மண்டல இணை செயலாளர் வழக்கறிஞர் அரசு, தவெக சென்னை பனையூர் அலுவலக உதவியார் குருசரண், அவருடன் வந்த மற்றொருவர் என 3 பேர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.

முன்னதாக நவ. 4, 5-ம் தேதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவ. 6-ம் தேதி முதல் நவ. 11-ம் தேதி வரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் 6 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டன. 6-வது நாளில் தவெக ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர், ஓட்டுநர்கள் 3 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

நவ. 10-ம் தேதி தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 3 பேரிடம் விசாரணை நடைபெற்றது. நவ. 11-ம் தேதி முதல் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் கடந்த 3 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.13) மதியம் சுமார் 1 மணிக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் மேற்கு நகரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன், பி.ஓ கண்ணப்பன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.

அவர்களிடம் செப். 27-ம் தேதி தவெக பிரச்சார கூட்டத்திற்கான மின் விநியோகம் செய்தது மற்றும் மின் துண்டிப்பு நடைபெற்றது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x