Published : 13 Nov 2025 06:49 AM
Last Updated : 13 Nov 2025 06:49 AM
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் தசரா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாக்களில் சராசரியாக 4 லட்சம் பக்தர்களை கையாள போலீஸாருக்கு உதவும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்ப ஹைடெக் கட்டுப்பாட்டு அறையை நிறுவிய இரு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா, திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா ஆகியவை சமீபத்தில் நடைபெற்றன. இவ்விரு விழாக்களிலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.
காணாமல்போன குழந்தைகளை மீட்க ‘புராஜெக்ட் கார்டியன்’ எனும் செயலி பயன்படுத்தப்பட்டது. வாகனங்கள் நிறுத்தும் இடங்களைக் கண்காணித்தல், போக்குவரத்து நெரிசலை நேரடியாக கண்காணித்தல், மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்காக ‘காப்போட் ஏஐ’ எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இதற்கான ஏ.ஐ. ஹைடெக் கட்டுப்பாட்டு அறையை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய இரு கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிறுவி, வழிநடத்தினர். இவ்விரு விழாக்களிலும் தலா 4 நாட்கள் இந்த ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை போலீஸாருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
குழந்தைகள் உடனுக்குடன் மீட்கப்பட்டனர். வாகனங்கள் மற்றும் நகை திருட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இதையொட்டி, இவ்விரு கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்துக்கு நேற்று வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். காவல் துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT