Last Updated : 12 Nov, 2025 06:12 PM

11  

Published : 12 Nov 2025 06:12 PM
Last Updated : 12 Nov 2025 06:12 PM

‘எந்தச் சூழலிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்’ - அப்பாவு

திருநெல்வேலி: “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகள் இல்லை என நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால், எந்தச் சூழல் வந்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க தமிழக வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். 2.0 முதல்வராக மீண்டும் ஸ்டாலின் வருவார்.” என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலிக்கு 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலக கோப்பை கொண்டுவரப்பட்டது. இந்தக் கோப்பையை கொண்டுவந்த குழுவினருக்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா,ஜெர்மனி உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் சார்பில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலக கோப்பையை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகம் செய்வதற்கான வாகன குழு பயணம் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி இந்த வாகன குழு திருநெல்வேலிக்கு இன்று வந்தது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இந்த உலக கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டு கோப்பையை அறிமுகம் செய்து காட்சிப்படுத்தினார். மேலும் போட்டிக்கான காங்கேயம் காளை லோகாவையும் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் 13 முறை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் நடத்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே 13 முறை நடந்ததற்கும் தற்போது நடக்கும் வாக்காளர் திருத்தத்துக்கும் வித்யாசம் உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு. உச்ச நீதிமன்ற நீதியரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆணையர்களால் அப்போது சிறப்பு திருத்தம் நடந்தது.

இப்போது இருப்பவர் ஆணையர் அல்ல. பிரதமர் சொல்லும் ஆணையை ஏற்று நடத்தும் நிறுவனமாக தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. ஆகவே அதனை எதிர்க்கிறோம். பிஹாரில் தேர்தலுக்கு முன் ரூ.10 ஆயிரம் அரசு நிதி பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இதற்குமுன் திருத்தம் செய்தபோது இறந்த வாக்காளர்கள் நீக்கம் , புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் வாக்காளர்களில் இருக்கும் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டது.

ஆனால் இப்போது வாக்காளர்களே இல்லாமல் ஆக்கி, புதியதாக சேர்க்கும் நிலை 12 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது

மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வருவதை தமிழக அரசு தடுப்பதாக நிர்மலா சீத்தாரமன் கூறியுள்ளார். சர்வசிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதி அவரது காலத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவரண நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குஜராத்துக்கு விளையாட்டு மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.663 கோடி நிதி வழங்கியுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு விளையாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லை. தமிழக அரசு மத்திய அரசின் எந்த திட்டத்துக்கும் தடையாக இல்லை. தேர்தல் ஆணையம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்தாலும், படிவம் 17 சி-ஐ உடனடியாக இணைய தளத்தில் ஏற்ற மறுக்கிறது.

தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது. டெல்லியில்தான் அமைதியின்மை உள்ளது. குளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளதாக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளதை மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழக பாஜகவை நாங்கள் எதிர்க்கவில்லை. தமிழக திட்டங்களுக்கு நிதி கொடுக்காத மத்திய பாஜக அரசை தான் எதிர்க்கிறோம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் எங்களுக்கு இல்லை என நாங்கள் சொல்ல மாட்டோம். அப்படி சொல்பவர்கள் நாங்களும் அல்ல. எந்தச் சூழல் வந்தாலும் தமிழக வாக்காளர்கள் திமுக அரசுக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். 2.0 முதல்வராக மீண்டும் ஸ்டாலின் வருவார். தேர்தல் ஆணையத்தின் சதியை முறியடிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மனத்தி கணேசன், தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற எட்வினா ஜெய்சன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x