Published : 11 Nov 2025 05:43 AM
Last Updated : 11 Nov 2025 05:43 AM
சென்னை: முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதான செந்தில் பாலாஜி ஓராண்டுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நவ.24-க்கு தள்ளிவைப்பு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரான கார்த்திகேயன் மற்றும் கணேசன் ஆகியோர் எம்.பி.எம்எல்ஏ-க்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள மோசடி வழக்கில் இறுதி முடிவு எட்டப்படும் வரை அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என தடை கோரியும், சாட்சி விசாரணையை தள்ளி வைக்கக்கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று திரும்பிய அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் ஆஜராகினர். அமலாக்கத் துறை தரப்பில் இந்த மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, அமலாக்கத் துறைக்கு அவகாசம் வழங்கிவிசாரணையை நவ.24-க்குதள்ளி வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT