Published : 11 Nov 2025 06:52 AM
Last Updated : 11 Nov 2025 06:52 AM
தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற போர்வையில் குடியுரிமைச் சட்டம் -1955ன்கீழ் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களை தேர்தல் ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. உள்ளுர் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு குடியுரிமை குறித்து முடிவு செய்ய அதிகாரம் அளிப்பதன் மூலம் மக்களின் குடியுரிமைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்து பேசாமல் தேர்தல் ஆணையம் இத்தகைய நடைமுறைகளை தன்னிச்சையாக திணிப்பது கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செயலாகும்.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் தமிழக அரசு ஊழியர்களாக இருந்தாலும் அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப்பட்டவர்கள் தான். எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மற்ற மாநிலங்களில் எத்தகைய வாக்குத் திருட்டை கையாண்டு பாஜக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்ததோ, அதே அணுகுமுறையை தமிழகத்திலும் பின்பற்ற தேர்தல் ஆணையத்தோடு கூட்டணி வைத்து பாஜக பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுகவோடு இணைந்து காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. சிறப்பு தீவிர திருத்த முயற்சிகளை கண்டித்து இன்று திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT