Published : 08 Nov 2025 12:17 AM
Last Updated : 08 Nov 2025 12:17 AM
புதுடெல்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய திமுகவின் மனுவை உச்ச நீதிமன்றம் நவம்பர் 11-ம் தேதி விசாரிக்கிறது.
பிஹாரைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விவேக் சிங் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் அக்டோபர் 27-ம் தேதியிட்ட அறிக்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. இந்த நடவடிக்கையை ரத்து செய்யாவிட்டால், லட்சக்கணக்கானோர் வாக்குரிமையை இழக்க நேரிடும். நியாயமான, நேர்மையான தேர்தல் நடத்துவது கேள்விக்கு உள்ளாகும்.
தவிர, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கான காரணங்களை தேர்தல் ஆணையம் அதன் அறிவிப்பில் தெரிவிக்கவில்லை. எனவே, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு வழக்கறிஞர் விவேக் சிங் ஆஜராகி, இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு முறையிட்டார். இதை ஏற்ற நீதிபதி, திமுகவின் மனுவை நவம்பர் 11-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் 11-ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT