Published : 06 Nov 2025 06:30 AM
Last Updated : 06 Nov 2025 06:30 AM

தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம்: குளறுபடிகளை சரிசெய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பள்ளிக் கட்டிடங்களுக்கு டிடிசிபி ஒப்புதலுடன் நிரந்தர தொடர் அங்கீகாரம் பெறுவதில் உள்ள குளறுபடிகளை 3 மாதங்களில் நிவர்த்தி செய்யுமாறு, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்​பாக, அகில இந்​திய தனி​யார் கல்வி நிறு​வனங்​கள் சங்​கத்​தின் மாநில பொதுச் செய​லா​ளர் கே.பழனியப்​பன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழ்​நாடு நகர் மற்​றும் ஊரமைப்பு திட்​ட​மிடல் சட்​டத்​தின் பிரிவு 47-ஏ-யின்​படி, அனைத்து பள்​ளிக் கட்​டிடங்​களுக்​கும் கட்​டிட அனு​மதிபெற வேண்​டும்.

நகர் ஊரமைப்பு இயக்​ககம் (டிடிசிபி) ஒப்​புதல் அளித்த பிறகே, அந்த பள்​ளி​களுக்​கான அங்​கீ​காரம் தொடர்ந்து நீட்​டிக்​கப்​படும் என்று அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது. ஆனால், அந்த அரசாணை ஒரு வரையறுக்​கப்​பட்ட காலத்துக்கு மட்​டுமே செல்​லுபடி​யாகும் என்​ப​தால், ஒப்​புதல் பெறு​வ​தில் சிரமம் ஏற்​பட்​டது.

இந்நிலை​யில், கடந்த மே 31-ம் தேதி வரை கட்​டப்​பட்​டுள்ள அனைத்து தனி​யார் பள்​ளி​களின் கட்​டிடங்​களுக்​கும் டிடிசிபி அனு​மதி பெறு​வ​தில் விலக்கு அளித்து அந்த பள்​ளி​களுக்​கான தொடர் அங்​கீ​காரத்தை நீட்​டிக்க வேண்​டும் என அரசுக்கு, தனி​யார் பள்​ளி​களின் இயக்​குநர் பரிந்​துரை செய்​திருந்​தார்.

ஆனால், அதன்​படி கல்​வித் துறை முதன்​மைச் செய​லா​ளர் எந்த முடி​வும் எடுக்​க​வில்​லை. எனவே, தனி​யார் பள்​ளி​களின் கட்​டிடங்​களுக்கு டிடிசிபி கட்​டிட வரைபட அனு​மதி பெறு​வ​தில் உள்ள குளறு​படிகளை சரிசெய்​து, தொடர் அங்​கீ​காரம் வழங்​கு​வதை முறைப்​படுத்த அரசுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கோரி​யிருந்​தார். நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் ஆர்​.சுரேஷ்கு​மாரும், அரசு தரப்​பில் வழக்​கறிஞர் எஸ்​.பிர​பாகரனும் ஆஜராகி வாதிட்​டனர்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, “மனு​தாரரின் சங்​கத்​தில் உள்ள பள்​ளி​கள் இதுதொடர்​பாக கல்​வித் துறை முதன்​மைச் செயலருக்கு தனித்​தனி​யாக மனு அளிக்க வேண்​டும். தனி​யார் பள்​ளி​களின் இயக்​குநர் அளித்த பரிந்​துரையை அடிப்​படை​யாக கொண்​டு, அந்த பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம் பெறு​வ​தில் உள்ள குளறு​படிகளை நிவர்த்தி செய்து முதன்​மைச் செயலர் 3 மாதங்​களில் முடிவு எடுக்க வேண்​டும்” என்று உத்​தர​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x