Published : 06 Nov 2025 06:11 AM
Last Updated : 06 Nov 2025 06:11 AM
சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தை 3 வாரங்களில் அங்கிருந்து அகற்றாவிட்டால் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “தாமரைக்கேணி என்ற ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தை நீர்நிலைப் பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டியுள்ளனர்.
இதன் மூலம் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானத்துக்கு சிஎம்டிஏ ஒப்புதலும் பெறவில்லை. எனவே நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள இந்த காவல் நிலையத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர், செம்மஞ்சேரி காவல் நிலையத்தை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்வது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “செம்மஞ்சேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய 6 வாரம் அவகாசம் வழங்க வேண்டும்” என கோரப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதிகள், “அந்த காவல் நிலையத்தை 3 வாரங்களுக்குள் அங்கிருந்து அகற்றாவிட்டால் நாங்களே நடவடிக்கை எடுப்போம்” எனக் கெடு விதித்து எச்சரித்து, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT