Published : 06 Nov 2025 01:42 AM
Last Updated : 06 Nov 2025 01:42 AM
சென்னை: டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப் படுகின்றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: குருப்-4 தேர்வில் வெவ்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளதால் காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும். அதே போல், ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்விலும் காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முந்தைய ஆண்டு தேர்வுகளின்போது இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்குரிய காலிப்பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்பட்டதால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதுபோல் தோன்றியிருக்கும். தற்போது அந்தந்த ஆண்டுக்குரிய காலியிடங்கள் அதே ஆண்டில் நிரப்பப்படுவதால் காலியிடங்கள் குறைவாக இருப்பது போல் தெரியலாம்.
மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான கல்வித்தகுதிக்கு ஏற்ப அவை குரூப்-4,2 தேர்வு மூலமாகவே நிரப்பப்படும்.
2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதில் குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் விரைவில் வெளியிடப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT