Published : 04 Nov 2025 12:26 PM
Last Updated : 04 Nov 2025 12:26 PM
கோவை: கோவை பீளமேடு விமான நிலையம் அருகே, கல்லூரி மாணவி நேற்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரித்து மூவரை கைது செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாணவி வன்கொடுமை வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி, இவரது சகோதரர் கார்த்திக் (எ) காளீஸ்வரன் (21), இவர்களது தூரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா (எ) தவசி (20) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் பிணையில் வந்துள்ளனர்.
இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. க.க.சாவடி, துடியலூர் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. இவர்கள் மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.
இவர்கள் கோவில்பாளையம் பகுதியில் சாவியுடன் நின்றிருந்த மொபட்டை திருடி பயன்படுத்தி வந்தனர். சம்பவ நாளில் இருகூர் வீட்டில் மது அருந்திவிட்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காரில் தோழியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை அரிவாளால் தாக்கி, பெண்ணை இருட்டான பகுதிக்கு 3 பேரும் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். காயமடைந்த வாலிபர் இரவு 11.20 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் தீவிரமாகத் தேடினர். அங்கு மிகவும் இருட்டாக இருந்ததால் 100 போலீஸார் தேடுதலுக்குப் பின் அதிகாலை நாலு மணி அளவில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மாணவி மீட்கப்பட்டார்.
ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த பகுதி உட்பட பல இடங்களில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி குற்றவாளிகளை தேடியதில், மூவரும் துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் மறைந்திருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸார் மூவரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் காவலர்களை தாக்கினர். அரிவாளால் வெட்டியதில் தலைமைக் காவலர் சந்திரசேகருக்கு (47) இடது கையில் வெட்டு விழுந்தது. போலீஸார் சுட்டதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது 296 (b), 118, 140, 309, 80 ஆகிய சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதானவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் மோதிரம் மற்றும் ஒரு மொபைல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற ஆபத்தான காலத்தில் போலீஸாரை தொடர்பு கொள்ள காவல் உதவி ஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் sos பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல்துறைக்கு புகார் செல்லும். லொகேஷனை கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும். சம்பவ இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாஸ்மாக் பார் மூடப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் தினமும் 5 பீட் ஆபிசர், இரண்டு ரோந்து வாகனங்கள் தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். சம்பவத்துக்கு சற்று முன்பு பிருந்தாவன் நகர் மெயின் ரோட்டில் போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். மாணவிகளின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் அக்க’, மாணவர்களின் பாதுகாப்புக்கு ‘போலீஸ் புரோ’ திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன” இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT