Published : 04 Nov 2025 06:24 AM
Last Updated : 04 Nov 2025 06:24 AM
திருவள்ளூர்: கடல் மற்றும் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 2 குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சத்தை நேற்று அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் துணிக்கடை ஊழியர்களான, கும்மிடிப்பூண்டி- பெத்திக்குப்பத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தேவகி (30), தேர்வழியைச் சேர்ந்த காயத்ரி (18), பெரியஓபுளாபுரத்தைச் சேர்ந்த ஷாலினி (18), பொன்னேரி அருகே கோளூரைச் சேர்ந்த பவானி (19) ஆகியோர் கடந்த அக். 31-ம் தேதி எண்ணூர், பெரியகுப்பம் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது, கடல் அலையில் சிக்கி, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவேற்காடு அருகே உள்ள அயனம்பாக்கம், மகாத்மா காந்தி நகர்- பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் தமீம் அன்சாரி என்கிற தமிழரசு (32)- வசந்தி (26) தம்பதி. இத்தம்பதியின் குழந்தைகளான ரியாஸ் (5), ரிஸ்வான் (3) ஆகியோர் கடந்த 1-ம் தேதி வீட்டின் அருகே உள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க ஏற்கெனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் சா.மு.நாசர் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.12 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ரியாஸ், ரிஸ்வான் ஆகியோரின் பெற்றோருக்கு நேற்று திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் ஆறுதல் கூறி, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.6 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வுகளின்போது, திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், பொன்னேரி சார் ஆட்சியர் ரவிகுமார், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், திருவேற்காடு நகராட்சி தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆணையர் ராமர்.
பூந்தமல்லி வட்டாட்சியர் உதயம் உடனிருந்தனர். மேலும், கும்மிடிப்பூண்டி - பெத்திக்குப்பம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டு வரும் 198 வீடுகளின் கட்டுமான பணிகள், சாலை, மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் தொடர்பாக அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு, ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT