Published : 03 Nov 2025 06:16 PM
Last Updated : 03 Nov 2025 06:16 PM
மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்தவர்களை தேர்வுத் துறை அலுவலர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிப்பதாக மாணவர்கள், பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கல்வி உதவித்தொகை தேர்வுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்புக்கான ஆண்டுத் தேர்வுகளை நடத்திவருகிறது. பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்களையும் இயக்குநரகமே அச்சிட்டு விநியோகம் செய்கிறது.
அசல் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மறுபிரதி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சிக்கான சான்றிதழ் ஆகியவற்றை பெற தேர்வுத் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பித்து பெறும் நடைமுறை கடந்த ஆண்டுகளில் இருந்தது. ஆனால், இவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு மறுபிரதி சான்றிதழ் ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் தாமதிக்கும் நிலை இருந்தது.
இதற்கு தீர்வு காணும் விதமாக, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் 2023-ல் அறிமுகம் செய்தார். இதன்பிறகு, ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு 2 மாதங்களில் சான்றிதழ்கள் கிடைத்து வந்தன. இந்நிலையில், தேர்வுத் துறையின் செயல்பாடுகள் மீண்டும் மந்தமாக நடைபெறுவதால் மறுபிரதி கேட்டு விண்ணப்பிக்கும் நபர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் கூறியதாவது: நாங்கள் மறுபிரதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து 10 மாதங்கள் ஆகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை. நேரில் வந்தாலும் அலுவலர்கள் உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். 3 நாட்களில் வழங்க வேண்டிய புலப்பெயர்ச்சி சான்றிதழ்களை சிலவாரங்கள் வரை இழுத்தடிக்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இயக்குநரகம் வந்து புலம்பிச் செல்வதை கண்கூடாக பார்க்கிறோம்.
இதனால், அரசு வேலை, உயர்கல்வி, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிடும் மாணவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தேர்வுத் துறையின் இந்த மெத்தனப்போக்கை, பள்ளிக்கல்வித் துறை உடனே சரிசெய்ய வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மறுபிரதி உள்ளிட்ட சான்றிதழ்களை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT