Published : 03 Nov 2025 05:56 AM
Last Updated : 03 Nov 2025 05:56 AM

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: உயர் படிப்​பு​கள், அரசு வேலைகளில் முன்​னுரிமை சதவீதத்​தை ​அதி​கரித்​து, அரசுப் பள்​ளி​களில் மாணவர் சேர்க்​கையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தி​யா​வில் உள்ள அனைத்து பள்​ளி​களின் மாணவர்​கள் சேர்க்​கை, உட்​கட்​டமைப்​பு​கள் போன்​றவற்றை கல்விக்​கான ஒருங்​கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யுடிஐஎஸ்இ) ஆய்​வுசெய்​து, அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. 2024-25-ம் ஆண்​டுக்​கான அறிக்​கை​யில் தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் முதலாம் வகுப்​பில் மாணவர்​கள் சேர்க்கை குறைந்து வரு​வ​தாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​கள், தனி​யார் பள்​ளி​கள் என ஒட்​டுமொத்​த​மாக 9,27,185 மாணவர்​கள் முதலாம் வகுப்​பில் சேர்ந்​துள்ளநிலை​யில், அரசு மற்​றும் உதவி பெறும் பள்​ளி​களில் 3,61,940, பிற தனி​யார் பள்​ளி​களில் 5,65,243 மாணவர்​கள் சேர்ந்துள்​ளனர்.

அரசு பள்​ளி​களை​விட 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் தனி​யார் பள்​ளி​களில் சேர்ந்​துள்​ளனர். கரோனா காலத்​தில் பலர் அரசு பள்​ளி​களில் சேர்த்​தனர். அதன்​படி 2022-23-ல் அரசு பள்​ளி​களில் சேர்க்கை அதி​கரித்​தது. அப்​படி சேர்ந்த மாணவர்​கள் மீண்​டும் தனி​யார் பள்​ளி​களுக்கு ஏன் சென்​றனர்? அரசுப் பள்​ளி​களில் போதிய கட்​டிட வசதி​கள், கழிப்​பறை வசதி​கள், பாது​காப்பு இல்​லாதது, போது​மான ஆசிரியர்​கள் இல்​லாமை போன்​றவை​தான் காரணம்.

எனவே, தமிழகம் முழு​வதும் உள்ள கல்​வித் துறை அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டு, மாணவர்​கள் இல்​லாத பள்​ளி​கள், குறை​வாக உள்ள பள்​ளி​கள், ஆசிரியர்​கள் பற்​றாக்​குறைபள்​ளி​கள், பள்​ளிக்கு தேவை​யான அடிப்​படை கட்​டமைப்​பு​கள் குறித்து கல்​வித் துறை உயர் அதி​காரி​கள், மாவட்ட ஆட்​சி​யர்​கள் மூல​மாக அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்​டும்.

அதனடிப்​படை​யில், உட்​கட்​டமைப்​பு​களை ஏற்​படுத்​து​வது, குறை​வாக மாணவர்​கள் உள்ள பள்​ளி​களை ஒன்​றிணைப்​பது, உபரி​யாக உள்ள ஆசிரியர்​களை பற்​றாக்​குறை​யுள்ள பள்​ளி​களுக்கு மாற்​று​வது போன்​றவற்றை போர்க்​கால அடிப்​படை​யில் செய்ய வேண்​டும். அரசுப் பள்​ளி​களில் படிப்​பவர்​களுக்கு அனைத்து உயர் படிப்​பு​கள் மற்​றும் அரசு வேலைகளில் முன்​னுரிமை சதவீதத்தை அதி​கரித்​து, மாணவர் சேர்க்​கையை அதி​கரிக்க உரிய நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு ராம​தாஸ் தெரி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x