Published : 01 Nov 2025 07:25 AM
Last Updated : 01 Nov 2025 07:25 AM
சென்னை: ‘மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?’ என அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்.25-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
அதைத்தொடர்ந்து, தங்கள் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யக் கோரி தமிழக டிஜிபிக்கு, 2024-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், தாங்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறையின் சென்னை மண்டல உதவி இயக்குநர் கிராந்தி குமார் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் 28 மணல் குவாரிகளில் அனுமதியை மீறி 987 ஹெக்டர் பரப்புக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது. இந்த மணலின் மதிப்பு ரூ.4,730 கோடி. ஆனால், ரூ.36.45 கோடி மட்டுமே அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. சட்டவிரோத மணல் குவாரி மூலம் கிடைத்த தொகையை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, “ஒரு விசாரணை அமைப்பான அமலாக்கத் துறை, மற்றொரு விசாரணை அமைப்பான மாநில காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி எப்படி வழக்கு தொடர முடியும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் அதற்கான அனுமதி அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது” என வாதிட்டார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “உத்தரப்பிரதேசம், பிஹார் மற்றும் குஜராத் மாநிலங்களில் தமிழகத்தைவிட 4 மடங்கு அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அந்த வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் அமலாக்கத் துறை எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு மட்டுமே அமலாக்கத் துறையின் கண்களுக்குத் தெரிகிறது.
டெல்லி மாநில காவல்துறை சம்பந்தப்பட்ட வழக்கில் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை இதேபோன்ற ஒரு வழக்கை தாக்கல் செய்திருந்தது. எந்த அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து அந்த மனுவை அமலாக்கத் துறை திரும்பப் பெற்றது” என்று தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவுக்கு 3 வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT