Published : 01 Nov 2025 06:21 AM
Last Updated : 01 Nov 2025 06:21 AM

பள்ளிக்கரணையில் சதுப்பு நிலம் என்று கூறப்படும் பகுதியில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ‘பள்​ளிக்​கரணை சதுப்பு நிலம் என்று கூறப்​படும் பகு​தி​யில், எந்த கட்டுமானப் பணி​களை யும் மேற்​கொள்​ளக் கூடாது’ என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்​தில் பன்​னடுக்கு குடி​யிருப்பு வளாகம் கட்ட அனு​மதி அளித்த உத்​தரவை ரத்து செய்​ய​வும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கி.மீ சுற்​றளவுக்கு எந்த கட்​டு​மானப் பணி​களுக்​கும் அனு​மதி அளிக்​கக்​கூ​டாது என்​றும் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அதி​முக வழக்​கறிஞர் அணி நிர்​வாகி ஜெ.பிரஷ்னேவ் பொதுநல மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ராக​வாச்​சா​ரி, பள்​ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்​பான வரை படத்தை தாக்​கல் செய்​தார். தொடர்ந்​து, சதுப்பு நிலப்​பகு​தி​யில் 1400 குடி​யிருப்​பு​கள் கட்ட சிஎம்​டிஏ அனு​மதி வழங்​கியது சட்ட விரோதம் என வாதிட்​டார். தமிழக அரசு தரப்​பில் ஆஜரான தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “மனு​தா​ரர் கூறும் ஒட்​டுமொத்த பகு​தி​யும் சதுப்பு நிலம் அல்ல. சம்​பந்​தப்​பட்ட கட்​டு​மானம் அமை​யும் பகுதி சதுப்பு நிலத்​துக்கு வெளியே உள்​ளது.

சதுப்பு நிலங்​களைப் பாது​காப்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில் சதுப்பு நிலத்​தின் எல்​லையை துல்​லிய​மாக தீர்​மானிப்​பது குறித்து ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. அந்​தப் பணி​கள் இன்​னும் 2 வாரங்​களில் முடிவடை​யும். தற்​போது கட்​டப்​படும் கட்​டிடத்​துக்கு சுற்​றுச்​சூழல்தாக்க மதிப்​பீட்டு ஆணை​யம், சுற்​றுச்​சூழல் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. அதன் அடிப்​படை​யில் மட்​டுமே சிஎம்​டிஏ அனு​மதி வழங்​கியது” என தெரி​வித்​தார். இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “சதுப்பு நிலங்​களை பாது​காப்​பது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் பல்​வேறு உத்​தர​வு​களைப் பிறப்​பித்​துள்​ளது.

தேசிய பசுமை தீர்ப்​பா​யத்​தின் தென்​மண்டல அமர்​வும் தாமாக முன்​வந்து வழக்கை விசா​ரணைக்கு எடுத்து உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இந்த விவரங்​கள் தெரி​யாமல் சிஎம்​டிஏ இந்த கட்​டு​மானத்​துக்கு அனு​மதி வழங்​கியது எப்​படி?” என்று கேள்வி எழுப்​பினர். மேலும், சதுப்பு நிலத்​தின் எல்​லையை துல்​லிய​மாக வரையறுக்​கும் பணி​கள் முடிவடை​யும் முன், கட்​டு​மானங்​களுக்​கும், வளர்ச்​சித் திட்​டங்​களுக்​கும் அனு​மதி அளித்து வந்​தால் ஒட்​டுமொத்த சதுப்பு நில​மும் அழிந்​து​விடும் நீதிப​தி​கள் சுட்​டிக்​காட்டினர். அதைத்​தொடர்ந்​து, இந்த வழக்கு தொடர்​பாக நவ.12-க்​குள் பதில் அளிக்​கும்​படி தமிழக அரசுக்​கும், மத்​திய அரசுக்​கும் உத்​தர​விட்ட நீதிப​தி​கள், அது​வரை குறிப்​பிட்ட பகு​தி​யில் எந்த பணி​களை​யும் மேற்​கொள்​ளக் கூடாது என கட்​டு​மான நிறு​வனத்​துக்கு உத்​தர​விட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x