Published : 31 Oct 2025 12:45 AM
Last Updated : 31 Oct 2025 12:45 AM
சென்னை: எஸ்ஐஆர் திருத்தத்தை எதிர்த்து நடத்தப்படவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு) தவிர 60 கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகம் உட்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த அக். 27-ம் தேதி வெளியிட்டு, பணிகளைத் தொடங்கியது. இந்த சிறப்பு வாக்காளர் குறித்த திருத்தத்துக்கு திமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்ப்புத்தெரிவித்தன.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகள் கடந்த 27-ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்தின. இதில், எஸ்ஐஆர் தொடர்பாக சென்னையில் நவ. 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை, திமுக நிர்வாகிகள் குழு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றது.
அந்தவகையில், தவெக, நாம் தமிழர், தேமுதிக, தமாகா உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தை, திமுக சார்பில் பூச்சி முருகன் நேரில் சந்தித்து, கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் நேற்று அழைப்பு கொடுக்கப்பட்டது. அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி தரப்பு) தவிர்த்து 60 கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை கேட்டு, அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். எஸ்ஐஆர் திருத்தத்தை ஆதரிப்பதால் அதிமுக, பாஜகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT