Published : 30 Oct 2025 06:40 AM
Last Updated : 30 Oct 2025 06:40 AM
சென்னை: முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: அக்.31-ம் தேதி (நாளை) முகூர்த்த நாள், நவ.1, 2 (சனி, ஞாயிறு) வார விடுமுறை நாட்கள் என்பதால், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிக மக்கள் வெளியூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூருக்கு நாளை 340 பேருந்துகள், நவ.1-ம் தேதி 350 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு நாளை 55 பேருந்துகள், 1-ம் தேதி 55 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரூ, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூரில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் 1-ம் தேதி 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
ஞாயிறு (நவ.2) அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய நாளை 6,299 பேர், 1-ம் தேதி 3,562 பேர், 2-ம் தேதி 6,570 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT