Published : 27 Oct 2025 07:10 AM
Last Updated : 27 Oct 2025 07:10 AM
மதுரை: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு போலீஸார் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஜூன் 26-ம் தேதி மதுரை திடீர் நகர் அங்கன்வாடி அருகே போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, 24 கிலோ கஞ்சா கைப்பற்றியதாகக் கூறி 7 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் விக்னேஷ் என்பவர் உட்பட 7 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விக்னேஷ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: விக்னேஷ் கஞ்சா வைத்திருந்ததற்கான எந்த ஆதாரத்தையும் போலீஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு போலீஸாரால் ஜோடிக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.
மேலும், நீதிமன்றத்தில் தவறான சாட்சியங்களை முன்வைத்து, விக்னேஷுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விக்னேஷ் கைதானதில் இருந்து ஜாமீன் வழங்கப்படாமல் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளார். எனவே, அப்போதைய திடீர் நகர் ஆய்வாளர் (பொறுப்பு) லிங்கப்பாண்டி மற்றும் உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோர் சேர்ந்து ரூ.10 லட்சம் இழப்பீட்டை ஒரு மாதத்தில் விக்னேஷுக்கு வழங்க வேண்டும்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 3 போலீஸாரிடமும் டிஜிபி விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷுக்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT