Published : 27 Oct 2025 01:10 AM 
 Last Updated : 27 Oct 2025 01:10 AM
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே 780 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது இன்று (அக்.27) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்புயலாக வலுவடைந்து, நாளைதீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் ஆந்திர கடலோரப்பகுதிகளில், குறிப்பாக மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாககரையை கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இவை காரணமாக இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,நாளை வடதமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத் தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 29 முதல் நவ.1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சி், ராணிப்பேட்டை,தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT