Last Updated : 26 Oct, 2025 03:10 PM

 

Published : 26 Oct 2025 03:10 PM
Last Updated : 26 Oct 2025 03:10 PM

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணி - முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மீண்டும் நேரில் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவ மழையையொட்டி, கடந்த 19.10.2025 அன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து திருவாரூர், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், 21.10.2025 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, விவசாய பெருங்குடி மக்கள் பாதிக்கப்படாத வகையில் நெல் கொள்முதல் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாத்திடவும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விரைந்து கிடங்குகளுக்கு கொண்டு செல்லவும் அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

24.10.2025 அன்று சென்னை, சீனிவாசபுரம் அருகில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்து முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (26.10.2025) அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை மீண்டும் ஆய்வுசெய்தபோது, பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொண்டு இரண்டு நாட்களுக்குள் நிறைவு செய்திடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை சுமார் 150 மீட்டர் அகலப்படுத்த முதல்வர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், இன்று மீண்டும் ஆய்வுமேற்கொண்டபோது, 200 மீட்டர் அகலத்திற்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து தூர்வாரி அகலப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முதல்வரின் ஆணையின்படி, படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, தற்போது 14 பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 4 ஜேசிபி (JCB) இயந்திரங்களுடன் அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் மண் திட்டுகளை அகற்றி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை இரண்டு நாட்களுக்குள் விரைந்து முடித்திடவும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் உத்தரவிட்டார்.

இப்பணிகளை விரைவுப்படுத்திட, கூடுதலாக களப் பொறியாளர்களை ஈடுபடுத்தி தூர்வாரி அகலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கூவம், முட்டுக்காடு, எண்ணூரில் கொசஸ்தலையாறு ஆகிய பகுதிகளில் உள்ள முகத்துவாரப் பகுதிகளையும் தூர்வாரி, அகலப்படுத்த வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், நீர்வளத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அஃதாப் ரசூல், நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் பொதுபணி திலகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x