Published : 26 Oct 2025 12:57 AM
Last Updated : 26 Oct 2025 12:57 AM
கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
கரூர் வேலுசாமிபுரத்தில் செப். 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரித்து வருகிறது. முன்னதாக, கடந்த 17-ம் தேதி கரூர் வந்த சிபிஐ குழுவிடம், கரூர் டவுன் போலீஸார் மற்றும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிபிஐ குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் மனோகரன், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 2-ல் நீதிபதி சார்லஸ் ஆல்பர்ட் முன்னிலையில் முதல்தகவல் அறிக்கையை கடந்த 22-ம் தேதி தாக்கல் செய்தார். அதில், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் பலர் என குறிப்பிட்டு, விசாரணையைத் தொடர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் குற்றவியல் நீதிமன்றம் 1-ல் சிபிஐ தாக்கல் செய்துள்ள எஃப்ஐஆரின் நகலைக் கேட்டு தவெக வழக்கறிஞர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT