Published : 25 Oct 2025 05:18 PM
Last Updated : 25 Oct 2025 05:18 PM
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில், செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன் என்பவர், சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை வெளியிட்டதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், அக்டோபர் 7-ம் தேதி கைது செய்யப்பட்ட வரதராஜன், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, ஜாமீன் கோரி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு 27-ம் தேதி பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT