Last Updated : 24 Oct, 2025 08:10 PM

 

Published : 24 Oct 2025 08:10 PM
Last Updated : 24 Oct 2025 08:10 PM

பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு 9,500 கன அடியாக அதிகரிப்பு!

பூண்டி: வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரிப்பால், சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், பிச்சாட்டூர் அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகளவில் நீர் வரத்து தொடங்கியதால், பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 15-ம் தேதி மதியம் முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 2,478 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்ட உயரம், 32.85 அடியாகவும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து விநாடிக்கு 10,250 கன அடியாகவும் இருந்தது. இன்று மாலை 6 மணியளவில், பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 9,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் அணை 199.27 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வடகிழக்கு பருவமழையால், இந்த அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது. ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து, இன்று காலை 10 மணியளவில் விநாடிக்கு 1,000 கன அடி உபரிநீரை ஆந்திர மாநில நீர் வளத்துறை அதிகாரிகள் திறந்தனர். பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கின. ஆகவே, அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநில பகுதியில் உள்ளது பிச்சாட்டூர் அணை. 1.85 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழையால் முழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. ஆகவே, அணை பாதுகாப்பு கருதி, நேற்று இரவு 11 மணியளவில் விநாடிக்கு 400 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. அந்தளவு, இன்று மதியம் 1 மணியளவில் விநாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த உபரி நீர் மற்றும் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் மற்ற நதிகளான கூவம் ஆறு, நந்தி ஆறு ஆகிய ஆறுகளிலும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொசஸ் தலை ஆறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x