Last Updated : 24 Oct, 2025 04:31 PM

2  

Published : 24 Oct 2025 04:31 PM
Last Updated : 24 Oct 2025 04:31 PM

சென்னையில் ரூ.42.45 கோடியில் புனரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில் 42.45 ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்., 24) திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா முதல்வர் ஸ்டாலினால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம், 58 ஏக்கர் பரப்பினை கொண்ட அடையாறு உப்பங்கழியினை சீரமைத்து, ‘தொல்காப்பியப் பூங்கா’ உருவாக்கப்பட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 2008-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர், பூங்கா பணிகள் நிறைவுற்று 22.01.2011 கருணாநிதியால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் முறையான பராமரிப்பின்றி இருந்த தொல்காப்பியப் பூங்காவினை மேம்படுத்திட ஜூலை 2021-ஆம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலமாக ‘தொல்காப்பியப் பூங்கா மறுமேம்பாட்டு’ பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தொல்காப்பியப் பூங்காவின் மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கியது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மையம், பார்வையாளர் மாடம், நடைபாதை, சிற்றுண்டியகம், புதிய கழிப்பறை, திறந்தவெளி அரங்கம், இணைப்புபாலம், கண்காணிப்பு கேமராக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் தொல்காப்பியப் பூங்கா பகுதி 1 மற்றும் பகுதி 2 இணைத்து சாந்தோம் சாலையில் உயர்மட்ட நடைமேம்பாலம் (Skywalk) மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலையின் குறுக்கே இருக்கும் குழாய் கால்வாய்க்கு மாற்றாக மூன்று வழி பெட்டகக் கால்வாய் (Triple Cell Box Culvert) அமைக்கப்பட்டுள்ளது.

‘தொல்காப்பியப் பூங்கா’, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு, சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இயற்கை சூழ்நிலை நிறைந்துள்ள தொல்காப்பியப் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள 3.20 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

தொல்காப்பியப் பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை 1.10.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், பூங்காவினை மக்களின் முழு பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி, இன்றைய தினம் தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.

சுற்றுச்சூழல் கல்வியினை குறிப்பாக சென்னை மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன் பெற்றிடும் வகையில், மாணவர்களுக்கான பிரத்யேக சுற்றுச்சூழல் கல்விச்சுற்றுலா (Students’ Eco-Tour) ஏற்பாடுசெய்யவும், தொல்காப்பியப் பூங்காவினை பார்வையிடும் அனைத்து மாணவர்களுக்கும் (அரசு / தனியார் பள்ளி) ஊட்டச்சத்து மிக்க சிற்றுண்டி வழங்கிடவும் அறிவுறுத்தியுள்ளார்.

தொல்காப்பியப் பூங்காவினை பொதுமக்கள் (ஒருவேளையில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல்) திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் பொது விடுமுறை நாட்கள் தவிர இணையதள முன்பதிவின் மூலம் பார்வையிடலாம்.

மேலும், மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் கல்வி நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்கள் (பள்ளி /கல்லூரி) அதிகபட்சம் 100 மாணவர்கள் ஆசிரியர்களுடன் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பார்வையிடலாம். பள்ளிகள் அனுமதிக்கப்படும் நாட்கள்: சென்னை மாநகராட்சி பள்ளிகள் - செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை; அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் - வெள்ளிக்கிழமை; தனியார் பள்ளிகள் - திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை. பூங்காவின் பராமரிப்புக்காக வியாழக்கிழமை விடுமுறை விடப்படும்.

அனைத்து நாட்களும் (திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பொது விடுமுறை நாட்கள் உட்பட) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவுக்கு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்திருக்கிறது நமது திராவிடமாடல் அரசு. உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் இத்தகைய பசும் போர்வைகளால் சென்னையை அலங்கரிப்போம்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x