Published : 24 Oct 2025 06:56 AM
Last Updated : 24 Oct 2025 06:56 AM
சென்னை: டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமையை நிலைநாட்ட முதல்வர் முயற்சித்து வருகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தங்களுக்கு ஏற்ற நபரைத் தேர்தல் நோக்கத்துக்காக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே காலதாமதம் செய்யப்படுகிறது என்று பேசியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால்தான், புதிய டிஜிபி நியமன பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உரிய காலத்தில் அனுப்பிவைக்க இயலவில்லை. வழக்கு முடிந்தவுடன் காலதாமதம் இன்றி அந்தப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது என்று ஏற்கெனவே கூறியதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதன்பிறகு டிஜிபி நியமனப் பட்டியல் தொடர்பாக யுபிஎஸ்சி நடத்திய கூட்டத்தில், விதிகளுக்குப் புறம்பாக சில பெயர்கள் முன்மொழியப்பட்டது குறித்து, தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பைப்பதிவு செய்தது.
மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது. தமிழக அரசு தனக்கு வேண்டப்பட்ட நபரை புதிய டிஜிபி-யாக அமர்த்த வேண்டும் என்பதல்ல இங்கே உள்ள பிரச்சினை. சட்டம் - ஒழுங்கு தொடர்பாக மாநில அரசின் கருத்துகளைப் புறக்கணித்து தனக்கு வேண்டப்பட்ட நபரை தமிழகத்தில் டிஜிபியாக அமர்த்த மத்திய அரசு முயலுவதே, புதிய டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு சந்திக்கும் பிரச்சினை.
டிஜிபி நியமனத்திலும் மாநில உரிமைகளை நிலைநாட்ட முழுமுயற்சிகளையும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எந்த சட்டப் பிரச்சினையும் இல்லாதபோதே, எத்தனை ஆண்டுகள் டிஜிபி இல்லாமல் அரசை நடத்தினார் என்பதை பழனிசாமி எண்ணிப் பார்க்க வேண்டும். அதை விடுத்து மாநில உரிமைகளுக்காகப் போராடும் முதல்வர் ஸ்டாலினைக் குறை கூறுவதா?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT