Published : 24 Oct 2025 01:09 AM
Last Updated : 24 Oct 2025 01:09 AM

புதிய காற்றழுத்தம்: 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுகுறைந்து, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வட மேற்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதற்கிடையே, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் இன்று (அக்.24) தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.

இதன் காரணமாக இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், 26-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x