Published : 23 Oct 2025 06:28 AM 
 Last Updated : 23 Oct 2025 06:28 AM
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: அக்.16-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அக்.19-ம் தேதி சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர், முன்னேற்பாடு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், அங்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும் முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னையில் மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
சென்னையில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெருநகர மாநகராட்சி வாயிலாக இந்த உணவு மையங்களிலிருந்து நேற்று 1 லட்சத்து 46 ஆயிரத்து 950 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் பொதுமக்களிடமிருந்து ‘1913’ என்ற உதவி எண்ணுக்கு வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களும், சென்னை குடிநீர்வாரியத்தின் மூலம் 2,149 களப்பணியாளர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தயார் நிலையில் சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 1,436 மோட்டார் பம்புகள், 478 வாகனங்கள், 489 மர அறுவை இயந்திரங்கள் 193 நிவாரண மையங்கள், 150 மைய சமையல் கூடங்கள், மீட்பு பணிகளுக்காக 103 படகுகள், 22 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT