Published : 23 Oct 2025 05:39 AM 
 Last Updated : 23 Oct 2025 05:39 AM
சென்னை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு இல்லை.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே இன்று (அக்.23) வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது வடக்கு, வடமேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும். மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 27-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், நாளை (அக்.24) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டிலும் புதுச்சேரியிலும் 26, 27-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
வட, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் இன்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT