Published : 22 Oct 2025 12:24 PM
Last Updated : 22 Oct 2025 12:24 PM
சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து இன்று அதிகாலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று அதிகாலையில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் செயல்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மைய சமையல் கூடம் மற்றும் தற்காலிக நிவாரண மையம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சிந்தாதிரிப்பேட்டை அய்யா தெருவில் உள்ள மைய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பதையும், சிந்தாதிரிப்பேட்டை மேற்கு கூவம் சாலையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையணை உள்ளிட்டவை தயாராக இருப்பதையும், அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட அண்ணாசாலை - ஜி.பி.சாலை சந்திப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்யும் கனமழையை பொதுமக்கள் எதிர்கொள்ளத் தேவையான உதவிகளையும், பணிகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT