Published : 22 Oct 2025 06:52 AM
Last Updated : 22 Oct 2025 06:52 AM
விழுப்புரம்: தீபாவளி விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது. தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்ளிரவு வரை சொந்த ஊருக்குச் சென்றனர்.
குறிப்பாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக சுமார் 1.60 லட்சம் வாகனங்களில் பல லட்சம் மக்கள் கடந்து சென்றனர். இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்ததால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் முதல் பொதுமக்கள் திரும்பத் தொடங்கினர்.
அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை நேற்று முன்தினம் 17 ஆயிரம் வாகனங்கள் கடந்த நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு பிறகு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 8 பாதைகள் வழியாகவும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இரவு 9 மணி வரை சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் சுவங்கச் சாவடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
மழையால் வாகனங்கள் வேகமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் மேல வீதியில் நெரிசல் காரணமாக புறவழிச்சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. மேலும், மாவட்டத்தில் 6 இடங்களில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணியால் சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT