Published : 20 Oct 2025 06:07 AM
Last Updated : 20 Oct 2025 06:07 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 17-ம் தேதி முதலே பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தோணி ஆற்றின் வழியாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், மரம், செடி, கொடிகளை அடித்து சென்றபடி, ஆற்றங்கரையில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது. சுமார் 20 அடி உயரமுள்ள கோயிலின் பெரும்பகுதியை மூழ்கடித்து, வெள்ளம் பாய்ந்தோடியது.
தற்காலிக கடைகள்... அதேபோல, அருவிக்குச் செல்லும் பாதை அருகில் மலைவாழ் மக்கள் அமைத்திருந்த தற்காலிகக் கடைகளையும் வெள்ளம் அடித்துச் சென்றது.
இதுகுறித்து கோயில் அதிகாரிகள் கூறும்போது, “நள்ளிரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் உண்டியல்கள் மூடப்பட்டன.
அதிகாலை 2.30 மணிக்கு பின்னர் வெள்ளம் வடிந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் தேங்கியிருந்த செடி, குப்பையை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். சுவாமி வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
அருவிக்கு செல்ல ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டது” என்றனர். பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருமூர்த்தி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. பாலாற்றில் விநாடிக்கு 1,500 கனஅடியும், காண்டூர் கால்வாயில் விநாடிக்கு 871 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT