Published : 17 Oct 2025 08:58 PM
Last Updated : 17 Oct 2025 08:58 PM
சென்னை: அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 'குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சனிக்கிழமை (அக்.18) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை), வரும் 20, 22, 23-ம் தேதிகளிலும் பெரும்பாலான இடங்களிலும், 19, 21-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (அக்.18) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும், வரும் 20-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் நாலுமுக்கில் 16 செ.மீ., ஊத்தில் 15 செ.மீ., காக்காச்சியில் 14 செ.மீ., மாஞ்சோலையில் 11 செ.மீ., கழுகுமலையில் 9 செ.மீ., ராமநாதபுரம் தீர்த்தாண்டதானம், திருநெல்வேலி மாவட்டம் களக்காடு, அம்பாசமுத்திரம், சென்னை மேடவாக்கத்தில் 8 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது' என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT