Published : 16 Oct 2025 06:22 PM
Last Updated : 16 Oct 2025 06:22 PM
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுவுக்கு புதிய தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவித்து 22 நாள்கள் ஆகும் நிலையில், அதை அங்கீகரிக்க சட்டப்பேரவைத் தலைவர் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் திமுகவுக்கு தாளம் போடுவவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கும் பேரவைத் தலைவரின் ஜனநாயகப் படுகொலையை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் எனது முன்னிலையில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி விடுவிக்கப்பட்டு புதிய தலைவராக தருமபுரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், துணைத்தலைவர் பதவிக்கு மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சிவக்குமார் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய நியமனங்களுக்கு அன்றே எனது தலைமையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றங்களை பதிவு செய்து, உரிய ஆணைகளை விரைந்து பிறப்பிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சட்டப்பேரவைத் தலைவருக்கு நான் முறைப்படி கடிதம் எழுதியிருந்தேன்.
எனது கடிதத்தை கடந்த மாதம் 25 ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழு புதிய நிர்வாகிகளும், கட்சியின் செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலுவும் பேரவைத் தலைவரை சந்தித்து அளிக்க நேரம் கேட்டனர். அப்போது பேரவைத் தலைவர் சென்னையில் இல்லாத நிலையில், அவர் கேட்டுக் கொண்டவாறு பேரவைச் செயலாளரிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
பேரவைத் தலைவரிடமும் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டுக் கொண்ட பேரவைத் தலைவர், விதிமுறைகளின் படி விரைந்து முடிவெடுத்து அறிவிப்பதாக பாமக சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்பாகவே கட்சித் தலைவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியதற்காக கடந்த ஜூலை 3 ஆம் நாள் சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர், சட்டமன்ற கொறடா உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதில் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்ட தகவலையும் அன்றைய தினமே பேரவைத் தலைவரிடம் தெரிவித்திருந்தோம். அதன் மீதும் விதிகளின்படி நடவடிக்கை எடுப்பதாக பேரவைத் தலைவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், அதன்பின் இன்றுடன் 22 நாள்களாகிவிட்ட நிலையில் பாமக சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றி விட்டு, அப்பதவிக்கு புதிதாக தேந்தெடுக்கப்பட்டவரை பேரவைத் தலைவர் அங்கீகரிக்கவில்லை. பேரவைக் கூட்டம் தொடங்கிய நாளில் பாமக சட்டப்பேரவைக் கட்சி நிர்வாகிகளும், வழக்கறிஞர் பாலுவும் மீண்டும் பேரவைத் தலைவரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்கள்.
அப்போது எனது கடிதம் ஆய்வில் இருப்பதாகக் கூறிய பேரவைத் தலைவர், அவை முன்னவரான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்து பேசும்படி கூறினார். அதன்படியே பாமக குழுவினர் முன்னவர் துரைமுருகனை சந்தித்து பேசினார்கள். அவரும் பேரவைத் தலைவரிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தார். ஆனால், அதன்பின் இரு நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பேரவையில் நடைபெறும் விவாதங்களில் பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்று கூறிக் கொண்டு ஜி.கே.மணிக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் நியாயமற்றவை.
இந்த சிக்கல் குறித்து பேரவைத் தலைவரிடம் கேட்கும் போதெல்லாம், இது குறித்து ஆய்வு செய்து வருகிறேன் என்ற பழைய பல்லவியையே அவர் மீண்டும், மீண்டும் பாடி வருகிறார். இதில் ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? என்பது தான் தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அவர்களில் ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.
மீதமுள்ள நால்வரின் மூவர் கூடி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மூவரும் நேரடியாகவே பேரவைத் தலைவரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்கள். எனது தலைமையில் செயல்படும் கட்சி தான் பா.ம.க. என்று தேர்தல் ஆணையமும் அறிவித்திருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் தெளிவான முடிவை எடுக்காமல் ஆய்வு செய்து வருகிறேன் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறிவருவதில் பெரும் உள்நோக்கம் இருக்கிறது.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாமல், விளம்பரங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாகவே காலம் தள்ளிவரும் திமுக அரசு, அதற்காகவே பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் தாளம் போட சிலரை வைத்திருக்கிறது. அவ்வாறு தாளம் போடுவர்கள் இருந்தால் தான் தங்களுக்கு பிழைப்பு நடக்கும் என்பதற்காகவே ஜனநாயக முறையில் பாட்டாளி மக்கள் கட்சின் சட்டமன்றக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை அங்கீகரிக்காமல் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களை பதவியில் நீடிக்க அனுமதிப்பது நியாயமல்ல.
வலிமையாக செயல்படும் கட்சிகளையெல்லாம் உடைத்து, அதில் ஒரு பிரிவை தங்களுக்கு ஆதரவாக செயல்பட வைப்பது திமுகவின் கலை ஆகும். அதே ஆயுதத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும் திமுக பயன்படுத்தி வருகிறது என்று ஏற்கனவே நான் குற்றஞ்சாட்டியிருந்தேன். அதற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டவர்களை பாதுகாக்கத் துடிப்பதன் மூலம் எனது குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது. திமுக ஏவிய ஆயுதம் முனை மழுங்கி மொக்கையான பிறகும் அக்கட்சித் தலைமை திருந்த மறுக்கிறது.
பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று முழங்கிய திமுகவும், அதற்கு தோள் கொடுத்து வரும் பேரவைத் தலைவரும் பேரவைக் குழு நிர்வாகிகள் நியமனத்தில் மட்டும் காலவரையே இல்லாமல் ஆய்வு செய்வோம் என்பது என்ன நீதி? தங்களுக்கு ஒரு நீதி... எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதி என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா?
பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்த நொடியே அரசியல் அடையாளங்களை இழந்து விடுகிறார். நீதி பிறழாது நடுநிலையுடன் செயல்படுவது தான் அவரது பணி ஆகும். திமுகவைச் சேர்ந்த பி.டி. ஆர் பழனிவேல் ராஜன் போன்ற பெருந்தகையாளர்கள் அப்படித் தான் செயல்பட்டிருக்கிறார்கள். அந்த இருக்கையில் அமர்பவர்கள் அதேபோல் செயல்படுவதன் மூலம் தான் அந்த இருக்கைக்கு பெருமை சேர்க்க முடியும்.
எனவே, ஆளுங்கட்சியின் விருப்பப்படி, ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்துவதை விடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக்குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோரை பேரவைத் தலைவர் அப்பாவு அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜனநாயகப் படுகொலை தொடர்ந்தால், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும் பா.ம.க. தயங்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT